இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இளையராஜாவின் இசைக்கு பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில், படத்தின் பின்னணி இசை 80களில் வெளியான படங்களில் இருப்பதுபோல உள்ளதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், விடுதலை படம் தொடர்பாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வெற்றிமாறன் பேட்டியளித்திருக்கிறார். அதில், “ஆடுகளம் படத்தில் யாத்தே பாடலில் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா அப்படிங்கிற வரி இப்போ கேட்கிறப்போ காண்டாகுது. ஏன் வெள்ளையா இருந்ததா தான் ஒரு பெண்ணை ரசிக்கணுமா அந்த நேரத்துல மிக பரபரப்பா பேசப்பட்ட வரி அது. பின்னாடி அது தவறுனு உணர்ந்துகொண்டேன். அதனை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். பாடலாசிரியர் சினேகன் வேற வரிகள் எழுதிக் கொடுக்க மாட்டேனு சொல்லப் போறதில்லை. அந்த நேரத்துல நாமும் அதனை என்ஜாய் பண்ணோம். புரிதல் இல்லாமைதான் அதற்கு காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.