தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கில் 6 இடங்களை தவிர்த்து தமிழகத்தின் 44 இடங்களில் பாதுகாப்புடன் உள் அரங்கு கூட்டமாக நடத்த தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்கியது..
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் அமர்வு முன்பு விரிவாக நடத்தப்பட்டது.. பிரச்சனைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு வாதிட்டது.. ஆனால் சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடை செய்வது நியாயமல்ல என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வாதிட்டது..
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.. அதன்படி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.