தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 7,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..
இந்நிலையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பரவும் கிளஸ்டர் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை.. தனித்தனியாகவே பாதிப்பு உறுதியாகி வருகிறது.. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.. தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ கடக்கும் பட்சத்தில் அல்லது கிளஸ்டர் பாதிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்..” என்று தெரிவித்தார்..