மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. 70 வயதைக் கடந்தும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், இன்றளவும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படத்தில் மம்முட்டியுடன் நடிகை ரம்யா பாண்டியனும் நடித்திருந்தார். பழனியில் படமாக்கப்பட்ட இப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன சீதா ராமம் திரைப்படம் பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது இவர் நடிப்பில் கிங் ஆஃப் கோதா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படி தந்தையும் மகனும் மலையாள திரையுலகில் போட்டி போட்டு நடித்து வரும் நிலையில், தற்போது அவர்களது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் மம்முட்டியின் அம்மாவும், துல்கர் சல்மானின் பாட்டியுமான ஃபாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயை இழந்து வாடும் நடிகர் மம்முட்டிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.