சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் வந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், ‘எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள்’ என்று அப்பெண் கூறியுள்ளார். இது திருமண மண்டபம் இல்லை. உங்கள் பெற்றோர் யார்? கழுத்தில் இருப்பது தாலி தானே? என போலீசார் கேள்வி எழுப்பினர். ”நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று இருவரும் அலப்பறை செய்துள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், 24 வயதான அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது.
இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்தபோது, அங்கு பணியாற்றிய 21 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் அப்பெண். பெற்றோரும், ‘எந்த கெட்டபழக்கமும் இல்லாத கணவரையும், முத்துக்கள் போன்ற குழந்தைகளையும் விட்டு விட்டு வாழ்க்கையை தொலைத்துவிடாதே. கணவரிடம் மன்னிப்பு கேட்டு குடும்பம் நடத்து’ என்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் கணவருடன் செல்லாமல், மனம் கவர்ந்த காதலனை அழைத்துக்கொண்டு திருமணம் செய்து வைக்குமாறு காவல்நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண்ணிடம், “கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு வந்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும். சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு, குழந்தைகளுடன் வாழும் பேரின்பத்தை விட்டுவிடாதே” என்று போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் அவரது கணவரோ, ‘அவள் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை. வந்தால் குழந்தைகளை கவனித்துக் கொள்ளலாம்’ என்றார். ஆனால் கணவருடன் செல்ல விரும்பாத இளம்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். அந்த 21 வயது இளைஞரோ, காதலியின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்றார். போலீசார் அறிவுரையை அரையும் குறையுமாக ஏற்றுக்கொண்ட அப்பெண் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவர் மிகுந்த மனவேதனையுடன் வீட்டிற்கு சென்றார்.