கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றும் அதனை கொண்டாட முடியாத சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமர போவது யார்? என்பதில் அந்த கட்சியினருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
எப்படியும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என்பது முடிவாகிவிட்ட நிலையில், முதல்வர் நாற்காலியில் அமரப்போவது சிவகுமாரா அல்லது சித்தராமையாவா என்ற கடுமையான போட்டி நிலவுகிறது.
இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்ந்து, ஆலோசனை நடைபெற்று வருகின்ற நிலையில் கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று அந்த கட்சியை சேர்ந்த 3வது முக்கிய நபர் ஒருவர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அதாவது, கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.