ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 19ம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை நாளை முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
அதன்படி ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர், உரிய இடவசதி உள்ளிட்டவற்றை வங்கிகள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு்ம தினமும் எவ்வளவு ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் மக்களிடம் புழக்கத்தில் இல்லாததால், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பானது தங்களது அன்றாட வாழ்வினை பெரிதளவில் பாதிக்கவில்லை என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.