மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த தனியார் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தனர்.
அந்த சோதனையில் அந்த பயணியின் பையில் இருந்து பசை வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவற்றின் மொத்த எடை 1 கிலோ 565 கிராம் என்றும், இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, வான் நுண்ணறிவு பிரிவினர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.