தமிழ்நாட்டில் புதிதாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்படும் மதுபானக் கடைகளின் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்து வந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு அருகே உள்ள 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, மூடப்படும் 500 கடைகளை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாக உள்ளது. எந்தெந்த கடைகள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பை வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.