நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் ஜூன் 7ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருதி வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை பள்ளிகள் திறப்பதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கூடிய விரைவில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.