பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது. தற்போது, தீவிர புயலாக வலுவடைந்த ‘பிபோர்ஜோய்’ புயல் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை…
இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.