70 வயது மூதாட்டியை உறவுக்கார இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (30). இவரது அத்தை, 70 வயது மூதாட்டியும், அதே பகுதியில் வசித்தார். இவருக்கு கணவர் இல்லை. இந்நிலையில், மூதாட்டி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர், மூதாட்டியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அவரது உறவினர் அர்ஜூனனிடம் விசாரித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இரவு கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை அர்ஜூன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது திருட்டு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.