ஓமந்தூரார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்தார் என்றும் ஆனால், அவரது மனைவி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்பியதால் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி ஓமந்தூராரில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும், இஎஸ்ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்திருந்தது. காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதிப்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவில் இருந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்பதால் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். ரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்ததால் பிளட் தின்னர் சிகிச்சையை ஓமந்தூராரில் செய்திருக்கிறார்கள். எனவே, இந்த சிகிச்சையை மூன்று, நான்கு நாட்களுக்கு நிறுத்தினால்தான் சில மருத்துவ சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
அது முடிந்த பிறகே ஆப்ரேஷன் செய்ய முடியும். அந்த வகையில், இன்று காலை சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் நாங்கள் பேசினோம். பிளட் தின்னர் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது, நான்கு, ஐந்து நாட்கள் கழித்து அவருடைய ரத்தப் போக்கு சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து விட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார்கள். ஓமந்துராராரில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் செந்தில் பாலாஜிக்கு இருந்தது.
ஆனால், அவரது துணைவியார் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். யாருக்கு என்ன விருப்பமோ அந்த சுய விருப்பத்தை தான் நிறைவேற்ற வேண்டும். அதுதான் மனித நியதி, அதனால் நாங்கள் நன்றாக சிகிச்சை அளிக்கிறோம். இங்கேயே சேருங்கள் என்று சொல்வது தப்பாகிவிடும். செந்தில் பாலாஜி மனைவி விரும்பியதால் காவேரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.