தொழில் கூட்டமைப்பான assocham சுபாஷ் சந்திர போஸ் நினைவு சொற்பொழிவை டெல்லியில் நேற்று நடத்தி இருக்கிறது. இதில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, மக்களின் திறன் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர் நேதாஜி. தோல்வி அடைந்த ராணுவத்தையும் அவர் ஜெய்ஹிந்த் உள்ளிட்ட விளக்கங்கள் மூலமாக ஊக்குவித்து நம்பிக்கை வழங்கினார். மக்களின் சாதி, மதம், பாலினம் உள்ளிட்டவற்றை தாண்டி காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்ற ஒற்றை சிந்தனையை நோக்கி எழச் செய்தார் எனக் கூறியுள்ளார்.
அவர் ஒரு தன்னிகர் இல்லாத தலைசிறந்த தலைவர். அவர் இந்தியாவின் விடுதலைக்காக ஒருபோதும் பிச்சை கேட்கவில்லை. மாறாக விடுதலை என்னுடைய உரிமை அதை நான் பெறுவேன் என்று தெரிவித்தார். அண்ணல் காந்திக்கு சவால்விடும் துணிவு அவருக்கு இருந்தது அதே சமயம் காந்தியின் மீது அவருக்கு ஆழமான மரியாதையும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான சுதந்திரத்தை தவிர வேறு எதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தவர் நேதாஜி. அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா பிரிவினை என்பதை சந்தித்திருக்காது. நேதாஜி ஒருவரை தான் நான் தலைவராக இருப்பேன் என்று ஜின்னாவே தெரிவித்திருக்கிறார். வரலாறு அவரிடம் கருணை இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் அவரது தாக்கம் மற்றும் தேசிய சிந்தனை இன்றளவும் தொடர்ந்து வருகிறது என்று பேசியுள்ளார் அஜித் தோவல்.
மேலும் அவர் பேசியதாவது, இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மனித வளம் தான். நம்முடைய வேலை திறனை வருடம் தோறும் மேம்படுத்திக்கொண்டால் 2050 ஆம் ஆண்டு உலகின் 40 சதவீத வேலை ஆட்கள் இந்தியாவில் இருந்து தான் தங்களது பங்களிப்பை வழங்குவார்கள். அத்தகைய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என கூறியுள்ளார்.