‘திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது’ என கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரஜித். இவருக்கு வயது 28. இந்நிலையில், பிரஜித்துக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், அந்த பெண்ணுடன் இருந்த உறவை பிரஜித் முறித்துக் கொண்டார்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், பிரஜித் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரஜித் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிபதி நாகபிரசன்னா இந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ”மனுதாரர் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. கணவரை அவர் விவாகரத்து செய்யவில்லை. விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது. இதனால், மனுதாரர் மீது பதிவான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதி உத்தரவிட்டார்.