திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மர்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதி இல்லை, சுத்தம் இல்லை, சரியான கட்டிடம் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு பள்ளிகல்வி துறை சார்பில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை முன்னறிவிப்பு இல்லாமல் ஒரே நாளில் ஆய்வு நடத்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், 2023-24-ம் கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் ஜூலை மாதம் முதல் முன்னறிவிப்பின்றி குழு ஆய்வு மேற்கொள்ளும். ஆய்வின்போது, பள்ளி வளாகம், வகுப்பறைகள், மேற்கூரைகள், கழிவறைகள் தூய்மையாக இருக்கிறதா? என்றும், குடிநீர் வசதி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்துடன், எமிஸ் பதிவுகள், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறன், கணித அடிப்படை செயல்பாடுகள், எண்ணும், எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள், கற்றல் விளைவுகள், பாடக்குறிப்பேடு மற்றும் பிற கல்வி இணை செயல்பாடுகள், குறைதீர் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் பள்ளிக்கு உட்பட்ட இல்லம் தேடிக்கல்வி மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் விவரங்கள் உள்பட அனைத்தும் சார்ந்து பள்ளிக்கு ஒரு அலுவலர் அல்லது ஒரு ஆசிரியர் பயிற்றுனரை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.