தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன பதிலை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டு 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 11ஆம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இதையும் கருத்தில் கொண்டே 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு பதிலளித்த அவர், ”பிளஸ்1 பொதுத்தேர்வு நடைமுறையில் இப்போது வரை எந்த மாற்றமும் கிடையாது. பொதுத்தேர்வு நடைபெறும் என்ற வகையில்தான் தற்போதும் இருக்கிறது. ஆசிரியர் சங்கங்கள் உடன் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் மாநில கல்வி கொள்கை குழுவிடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.