கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த லோக் ஆயுக்தா பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பல ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது.
குறிப்பாக, பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவருக்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வாயடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் வெளிவந்துள்ளன. தாசில்தார் அஜித் ராய்க்கு சொந்தமான பெங்களூரு கொடிகேஹள்ளி வீடு, சந்திரா லே அவுட் அடுக்குமாடி வீடு உள்ளிட்ட 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. சோதனையில், ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்கம், சொகுசு வாகனங்கள், 65 கைக் கடிகாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அத்துடன் மலைக்க வைக்கும் விதமான சொத்து ஆவணங்களும் லோக் ஆயுக்தா போலீசாரிடம் சிக்கியுள்ளன. பெங்களூரு தொட்டபள்ளாப்புராவில் மட்டும் இவர் சுமார் 100 ஏக்கர் மதிப்பில் நிலம் வாங்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அந்த நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலம், தேவனஹள்ளியில் 18 ஏக்கர் பண்ணை வீடு என பல கோடி மதிப்பிலான சொத்துக்களை தாசில்தார் அஜித் ராய் வாங்கியுள்ளார். மேலும், அஜித் ராய் தனது மனைவி, உறவினர் மற்றும் நண்பர்களின் பேரில் பல பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். தக்ஷின கணடா மாவட்டத்தின் புட்டுர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமாரின் தந்தை ஆனந்த் ராய்யும் ஒரு அரசு ஊழியர்.
இவரது தந்தை 51 வயதில் பணியில் இருக்கும் போதே மறைந்த நிலையில், அதற்கான நிவாரண அடிப்படையில் பணிக்கு சேர்ந்தவர் அஜித். பணிக்கு சேர்ந்து குறுகிய காலத்திலேயே இத்தனை கோடிக்கணக்கான சொத்துகளை இவர் வாங்கி குவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சட்டவிரோதமாக சேர்த்த சொத்து கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பை கூட நெருங்கும் எனக் கூறப்படுகிறது. இவர் பொது சொத்து ஆக்கிரமிப்பு விவகாரம் ஒன்றில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 2022 நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்ட போதும் முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்தது அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. இதையடுத்து, தாசில்தாரை கைது செய்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் சிக்கிய ஆவணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.