தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் நிக்சன் என்ற நபர் பாலியல் ரீதியாகவும், ஆபாசமாக பேசியும் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகி அந்தோணி சேவியரிடம் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்தோணி சேவியர் தொல்லை அளித்த நபருக்கு ஆதரவாக பேசியதுடன், இதெல்லாம் இப்பள்ளியில் சகஜம், விருப்பம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று விடலாம், இது குறித்து வெளியில் கூறினால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்பதற்காக ஆசிரியை தனது உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டார். ஆனால், நிர்வாகம் தரப்பில் எவரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார், அந்த ஆசிரியையிடம் புகார் மனு பெற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.