அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
கடந்த 2000ஆம் ஆண்டு வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், உலகளவில் நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. 2005இல் கொண்டுவரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி, புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும், புலன் விசாரணை செய்வது அவசியமான ஒன்று.
குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, புகார் வழக்கு தாக்கல் செய்வதற்கு அதிகாரம் உள்ளது. ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான். காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும். அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை ஏற்றுக் கொண்டால் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் சொத்துக்களை முடக்கம் செய்ய மட்டுமே முடியும். சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பக் கட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது.
அதனால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது. கைதுக்கு பிறகும், புகார் தாக்கலுக்கு பிறகும் புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதால், கைது செய்த அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க முடியாது என்பதால், அமலாக்கத்துறைக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை.
தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எந்த அழுத்ததுக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த கடுமையான பிரிவுகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.