நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால் (53). இவர், நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தேவிப்பிரியா ராசிபுரம் நகர் மன்றத்தின் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மூத்த மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை இவர்களது வீட்டிலிருந்து யாரும் வெளிவராததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, திமுக நகர துணைச் செயலாளர் அருன்லால், கவுன்சிலர் தேவிப்பிரியா, இளைய மகள் மோனிஷா ஆகிய 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.