மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைக்கும் வகையில் புதுவித மருந்து காக்டெய்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோல் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேர் இந்த செயல்முறையைத் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார். அதில் அவர், “மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைப்பது சாத்தியம் என்பதை நாங்கள் முன்பே விளக்கியுள்ளோம். இப்போது வயதாவதைத் தடுக்க ரசாயன காக்டெய்லை உருவாக்கியுள்ளோம். இது குறைந்த செலவிலேயே நமது உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஒவ்வொரு கெமிக்கல் காக்டெய்லிலும் 5 மற்றும் 7 கெமிக்கல்கள் இருக்கிறது. இதில் இருக்கும் பல கெமிக்கல்கள் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் கெமிக்கலாகும். வயதாகும் செயல்முறை தடுத்து அதை மாற்றியமைக்கும் செயல்முறையைக் கண்டுபிடிக்க 3 ஆண்டுகளுக்கு மேலானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனித உயிரணுக்களைப் புத்துயிர் அளிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மேலும், முதற்கட்டமாக நாங்கள் எலிகளில் இது குறித்த விரிவான சோதனையை நடத்தினோம். அதில் பார்வை நரம்பு, மூளை திசு, சிறுநீரகம் மற்றும் தசைகள் ஆகியவற்றில் இது சிறந்த பலனைத் தருகிறது. வயதான எலிகளின் பார்வை மேம்பட்டுள்ளது. மேலும், அதன் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதை நாங்கள் குரங்குகளிலும் சோதனை செய்தோம். அதன் பார்வை அதிகரித்துள்ளது. இப்படி இதில் அனைத்துமே பாசிட்டிவாகவே இருக்கிறது.
இதன் காரணமாக அடுத்தகட்டமாக மனிதர்களின் மீது சோதனையை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மனிதர்கள் வயதாவதைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்படும் மிகப் பெரிய சோதனை இதுவாகும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். எல்லாம் சரியாக நடந்தால் சில ஆண்டுகளில் வயதாவதைத் தடுக்கும் மருந்துகள் நம்மிடம் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். மனிதர்கள் மீது சோதனையை ஆரம்பிக்க இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை எனத் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் மீது சோதனை வெற்றிகரமாக முடிந்தாலும் அது முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.