நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.
இதன்காரணமாக, உலகின் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 1948-ம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி ‘உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
நமது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நினைவூட்டலாக இந்த தினம் செயல்படுகிறது. ஒரு நிலையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தின் முன்மாதிரியாக ஆரோக்கியமான சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது. நம்மை சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும்.
இயற்கை வளங்கள் மிக விரைவான விகிதத்தில் குறைந்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள்தொகை அதிகரிப்பு. தொழில்நுட்ப முன்னேற்றமும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், புவி வெப்பமடைதல், ஓசோன் லேயரில் சேதம் (Ozone Layer Depletion), காட்டுத் தீ, போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.
அந்தவகையில், இயற்கையை பாதுகாக்க வீட்டில் நம்மால் முடிந்த மாற்றங்களை செய்வோம். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பதை காணலாம். கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஓரம் தள்ளிவைத்து, மூங்கில், உலோகம், பிபிஏ இல்லாத பொருள், கண்ணாடி, எஃகு அல்லது தாமிரம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம். அதேபோல உங்கள் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் காகிதத்தை பல வழிகளில் பயன்படுத்த முயற்சி செய்யலாம். நீங்கள் வீட்டில் சில குறிப்புகளை எழுத நினைத்தால் உங்கள் செய்தித்தாளின் ஒரு பக்கத்தைப் பயன்படுத்தவும். அதேபோல கைகளை துடைக்க காகித டிஸ்ஸுகளுக்கு பதிலாக கை துண்டுகள் பயன்படுத்தவும்.
உரம் தயாரிப்பது உங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைப்பதற்கும், உங்கள் கொல்லைப்புறத் தோட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த மற்றும் திறமையான வழியாகும். காய்கறி ஸ்கிராப், முட்டைக் கூடுகள் மற்றும் தேநீர் பைகள் போன்ற சமையலறையிலிருந்து எஞ்சியவற்றை நீங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
முடிந்தவரை, உணவு, நீர் மற்றும் வழக்கமான பயன்பாட்டின் பொருட்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ற உபயோகத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.- பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை அணைப்பதன் மூலம் மின் ஆற்றலைச் சேமிக்கலாம். தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்க்க, கை கால் துலக்கிய பறகும், மற்ற பயன்பாடுகளுக்குப் பிறகும் குழாயை நன்றாக மூட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த சிறிய செயல்களை செய்து நாம் வளங்களைப் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை அளிக்கலாம். இயற்கை சீராக இருந்தால், வளங்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், பூமி செழிப்பாய் இருக்கும்.