மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா (26). மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில், ஜீவிதா கர்ப்பமானார். கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக சல்லக்குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த ஜீவிதா அங்கேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வருவதாக நேற்று மாலை ஜீவிதா கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் குழந்தையை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் கழுத்தில் இருந்த கொப்பளங்கள் வெடித்ததால் இறந்திருக்கலாம் என்று ஜீவிதா கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், ஜீவிதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, வெயில் காலத்தில் ஏற்படும் வேனல் கட்டிகள் போன்ற கொப்புளங்கள் குழந்தையின் கழுத்தில் அதிகம் இருந்ததாகவும், அதனால் தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்ததாகவும் ஜீவிதா கூறியுள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜீவிதாவை கைது செய்தனர். திருமணமாகி 8 ஆண்டுக்கு பின் பிறந்த பச்சிளங்குழந்தையை தாயே கொன்ற கொடூர சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.