சார் – பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் – பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்யப்படுவது தெரிந்த விஷயம்தான். இந்த பத்திரங்கள், பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளே உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவுத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல அலுவலகங்களில் பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமும் காலை, 10 மணி முதல் மாலை 3 மணி வரை பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இந்த நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை. காலையில் ஒரு மணி நேரம் கழித்துதான், பணிகளையே துவக்குகிறார்கள். இதனால், டோக்கன் வரிசைபடி பத்திரப்பதிவு முடியாமல், மக்கள் காத்திருக்க வேண்டியதாகிவிடுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சார் – பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் – பதிவாளர்களுக்கு பதிவுத்துறை மேலும் சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்திருக்கிறது. காரணம், பத்திரங்களை பதிவு செய்ய, சொத்து விபரங்களை, ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்ய வேண்டும். தகவல் சரிபார்க்கப்பட்ட பிறகு பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கப்படும். வெப்சைட் மூலமாகவும் அப்பாயிண்ட்மென்ட் தந்து, அதற்கான டோக்கன்களும் வழங்கப்படும்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, தினமும் காலையில், பத்திரப் பதிவுக்கான இணையதளத்தில், “லாக் இன்” செய்து, அதன் கணினி திரை விபரத்தை போட்டோ எடுத்து, வாட்ஸப் மூலம் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.. இந்த நடைமுறை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும். தவறும் சார் – பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Read more: தினமும் 20 நிமிடங்கள் நடப்பதால் இவ்வளவு நன்மைகள் உண்டா..? – கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க