உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. 5 வயது சிறுமி கோவிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரை, பக்கத்து வீட்டுக்காரரான பவித்ரா என்பவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியை குற்றம் சாட்டப்பட்டவர் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உள்ளூர் மக்கள் ஓடிச் சென்று அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதனால், போலீசார் அவரை விடுதலை செய்தனர். ஆனால், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மருந்துக் கடையில் பணிபுரிகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் அவரது மனநலப் பிரச்சனைகள் குறித்து தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், அவர் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.