குழந்தைகளுக்குத் தொடக்கக் கடவுளாகவும், தடைகளை நீக்கும் தெய்வமாகவும், முதன்மை வணங்கப்படும் விநாயகர் குறித்து பக்தர்கள் மத்தியில் காலங்காலமாக ஓர் கேள்வி நிலவி வருகிறது. அது “விநாயகர் திருமணம் செய்தாரா? அவர் பிரம்மச்சாரியா?” என்பதுதான். சிலர் விநாயகருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என நம்புகின்றனர். மற்றொருபுறம், பலர் அவர் பிரம்மச்சாரி எனக்கூறி வழிபடுகின்றனர். இதோ அதன் பின்னணியை அறிந்து கொள்வோம்.
வடஇந்திய புராணங்களில் விநாயகருக்கு “புத்தி” (ஞானம்) மற்றும் “சித்தி” (வெற்றி) என்ற இரண்டு மனைவிகள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவர்கள் வெறும் பெண்மணி வடிவில் அல்ல; வாழ்க்கையின் முக்கிய கூறுகளான அறிவும், வெற்றியும் என்பதைக் குறிக்கும் சக்திகள்.
விநாயகர் அனைத்து செயல்களுக்கும் முன்னே வணங்கப்படுவது, நம்முடைய அறிவும் வெற்றியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான ஒப்பீடாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், இந்த இரண்டு சக்திகளை அவருடைய துணைகளாக விவரிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் பெரும்பாலான விநாயகர் கோயில்களில், அவர் தனியாக, எந்தவிதமான துணையுமின்றி வணங்கப்படுகிறார். இங்கு விநாயகரை பிரம்மச்சாரி என்றும், பார்வதி தேவியின் மிகுந்த பக்தர் என்றும் கருதி வழிபடுவது வழக்கமாக உள்ளது. விநாயகரின் திருமணக் கதையில் மற்றொரு சுவாரஸ்யமான பகுதி உள்ளது. ஒரு நாள் துளசி தேவி, விநாயகர் தியானத்தில் இருந்தபோது அவரை பார்த்து காதலிக்க ஆரம்பித்தாள்.
திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். ஆனால் விநாயகர் அதை மறுத்தார்.
அதனால் கோபமடைந்த துளசி, “உனக்கு இரண்டு திருமணங்கள் நடக்கும்!” என சாபமிட்டார். பதிலுக்கு விநாயகர், “நீ ஒரு தாவரமாக மாறுவாய்” என சாபம் விடுகிறார். பின்னர், துளசியை அனைத்து சடங்குகளிலும் புனிதமாக பயன்படுத்தப்படும் துளசி செடி என ஆசீர்வதிக்கிறார். இந்த கதை விநாயகருக்கு திருமணம் நடந்ததற்கான ஒரு புராணக் காரணியாகக் கூறப்படுகிறது.
Read more: சட்டரீதியான நடைமுறை தெரியாத EPS ஒரு அரைவேக்காடு..!! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்