தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2 வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருணாகரண் (38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அருணாகரன் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் தலை உள்ளிட்ட உடல் முழுதும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அருணாகரன் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன்ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜிசரவணன் உத்தரவை மீறி, போக்குவரத்து விதிகளுக்கு மாறாக தூத்துக்குடி மாநகரச் சாலைகள் திருச்செந்தூர் சாலை, துறைமுக சாலைகளில், வலதுபுற வாகன பயணம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சைலன்ஸர் இல்லாமல் பேரிரைச்சலுடன் வாகனங்கள் ஓட்டப்படுகிறது.
இதனால் தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தூக்கம் இல்லாத லாரி ஓட்டுனர்களாலும், நெருக்கடியான பகுதியில் உள்ள லாரி செட்டுகளாலும் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.