தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2025 – 26ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் துறையூர், வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், புதிய கல்லூரிகள் தொடங்குமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டால், 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.
ஏற்கனவே, 2025 – 26ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், உயர்கல்வித்துறை சார்பில் ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, ஒட்டப்பிடாரம், பெரம்பலூர், குன்னூர், நத்தம், பண்ருட்டி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அரசியல் கல்லூரிகள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.