தந்தை ராமதாஸின் உயிருக்கு மகன் அன்புமணியால் ஆபத்து இருப்பதாக மறைந்த காடுவெட்டி குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான மணிகண்டன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காடுவெட்டி குருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அவர் ராமதாஸிடம் சென்றார். அப்போது, தனக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், வெளிநாட்டு சிகிச்சைக்கு உன்னிடம் பணம் இருக்கிறதா..? என அன்புமணி முன்னிலையில் காடுவெட்டி குருவை பார்த்து ராமதாஸ் கேட்டார். இதனால், காடுவெட்டி குரு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனாலும், காடுவெட்டி குருவை சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்காக ராமதாஸ் பணத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
அப்போது, அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குருவுக்கு நீங்கள் எதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும் என்று ராமதாஸிடம் கூறியுள்ளார். பிறகு அவரை இங்குள்ள மருத்துவமனையில் 10 நாட்களாக இருக்க வைத்து காடுவெட்டி குருவை அன்புமணி ராமதாஸ் மருத்துவ கொலை செய்தார். இந்த உண்மையை நிச்சயம் ராமதாஸே விரைவில் வெளியிடுவார்.
காடுவெட்டி குரு மருத்துவமனையில் இறந்து 10 நாட்கள் ஆகியும், அவரது மரணத்தை அறிவிக்காமலேயே இறந்தனர். அன்று ராமதாஸை கையை கட்டி, வாயை பொத்தி, ஊனமாக்கி வைத்திருந்தார்கள். உண்மையில் ராமதாஸ் நல்ல மனிதர். காடுவெட்டி குரு இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என அடிக்கடி கூறுவார். காடுவெட்டி குரு அவரின் மூத்த மகன் போன்று நினைத்தார்.
இன்னும் இரண்டு மாதமோ, மூன்று மாதமோ அல்லது மூன்று ஆண்டு காலமோ. எப்படியும் ராமதாஸின் கதையை சத்தம் இல்லாமல் முடித்து விடுவார்கள்.
அன்புமணி ஒரு பக்கம் என்றால், அவரது மனைவி சௌமியாவாலும் ராமதாஸின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே, ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் பகை இருந்து வரும் நிலையில், காடுவெட்டி குருவின் உறவினர் மணிகண்டன் இவ்வாறு பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “பெரியாருக்கே சாதி சாயம்”..!! “அடுத்தாண்டு தேர்தலில் பணம் கொட்டப் போகிறது”..!! தவெக தலைவர் விஜய் விளாசல்..!!