நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, குறைந்தது 151 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் தீவிரம் காரணமாக வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நைஜர் மாநில அவசரநிலை மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹுசைனி, “மோக்வாவில் மட்டும் சனிக்கிழமை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்” என்றார்.
இதுவரை குறைந்தது 151 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 318 பேர் வெள்ளத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வெள்ள ஓட்டத்தில் 503 வீடுகள் சேதமடைந்துள்ளன. உடல்களை தேடும் மீட்புப் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகளில் உள்ளூர் நீர்மூழ்கும் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரிய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே நைஜர் உள்ளிட்ட மத்தியப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோக்வா நகரத்தில் ஏராளமான வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சில வீடுகளில் இன்னும் மக்கள் உள்ளதாகக் கூறப்படுவதால், மீட்புப் பணிகள் சவாலாக நீடிக்கின்றன.
வெள்ள பாதிப்பை குறைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ச்சியாக பல இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தி வருகிறது. 2022-ல், முந்தைய ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு, வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
14 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர், 4.4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிந்தன. தொடரும் மழையால் மீண்டும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். நைஜீரியாவின் மத்திய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,395 ஆக உயர்வு.. ஒரே நாளில் 4 பேர் பலி..!!