சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம்.
கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், மரணமும் இல்லாத மூலிகையை தேடி அங்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு உதவ, தன்னை விட வயது மூத்தவரும், அதே ஊரை சேர்ந்தவருமான ஒருவரை சீடனாக அழைத்துச் சென்றார். அவரது இயற்பெயர் கஞ்சமலை காலாங்கிநாதர்.
இருவரும், மலை அடிவாரத்தில் குடில் அமைத்து, தினமும் காலையில் மூலர் மூலிகையை தேடி வந்துள்ளார். இதற்கிடையே, அவருக்கு தேவையான உணவை சீடர் காலாங்கி நாதர் சமைத்து வைத்திருப்பார். ஒரு நாள், காலங்கி நாதர் உணவு சமைத்து கொண்டிருந்த போது, திடீரென உணவு பொங்கி வழிந்துள்ளது. உடனே அருகில் இருந்த கரண்டியை தேடிப் பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், பக்கத்தில் இருந்த ஒரு செடியை பிடிங்கி, அதன் வேர் பகுதியை தண்ணீரில் கழுவி விட்டு, உணவை கிண்டி உள்ளார். ஆனால், சில நொடிகளிலேயே அந்த உணவு கருப்பாக மாறியுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காலங்கிநாதர், உடனே அந்த வேரை நெருப்பில் போட்டு எரித்துவிட்டார். மேலும், உணவு கருப்பாக மாறியதால், இந்த உணவை தனது குருநாதருக்கு கொடுக்க முடியாது என்பதால், அதனை அவரே சாப்பிட்டுள்ளார். பின்னர், குருநாதருக்கு புதிதாக உணவு சமைத்து வைத்திருந்தார். இதற்கிடையே, மூலிகையை தேடிச் சென்ற மூலர், காலங்கிநாதர் இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது, அவரை பார்த்து நீங்கள் யார்..? என்று வினவியுள்ளார். அதற்கு அவர், நான் தான் உங்கள் சீடன் காலங்கிநாதர் என்று கூறியுள்ளார்.
உடனே அதற்கு மூலர், ‘நீ எப்படி இவ்வளவு இளமையாக மாறினாய்..? என கேட்க, இவரும் நடந்ததை விளக்கியுள்ளார். அதற்கு மூலர், ‘நான் தேடி வந்த மூலிகையே அதுதான். அது எங்கே? என கேட்க, நெருப்பில் போட்டுவிட்டதாக கூறினார். பின்னர், அந்த வேரை கழுவிய தண்ணீரை குடித்த மூலரும், இளமையான தோற்றத்துக்கு மாறினார் என்கிறது வரலாறு. இளமை திரும்பிய மூலர், அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் வருவதாக கூறிய காலாங்கிநாதரிடம், ‘நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். பின்னர், குருவின் ஆலோசனையை தட்டிக்கழிக்காத காலாங்கிநாதர், அங்கேயே இருக்க முடிவு செய்தார்.
கோயிலின் சிறப்பு..
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில், அதை காலங்கிநாதர் எனும் சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் நம்புகின்றனர். இந்த கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால், அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். மேலும், ஆண்டுதோறும் சித்திரை 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
காந்த தீர்த்தக்குளம்..
இந்த கோயில் வளாகத்திற்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றி இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த கோயிலுக்கு அருகே பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் அமைந்துள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ள நிலையில், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக இந்த தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முடிந்தால், நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.. சித்தரின் அருளை பெற்று வாருங்கள்..