“பாஜக தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 வரை தாமதப்படுத்தியுள்ளது, இதன் மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 க்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த பிறகு, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான எம்.கே. ஸ்டாலின், 2026 க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து எல்லை நிர்ணயப் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார் .
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது.
பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Readmore: மாநிலங்களவைத் தேர்தல்.. திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்…!