இறக்குமதி வரியை 10% குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் எண்ணெய் விலையைக் குறைக்கும் வகையில், கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10% குறைக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை பணவீக்க தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 17.4 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கடுகு அறுவடை சிறப்பாக இருந்தபோதிலும், உலகளாவிய விலை உயர்வு சமையல் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது. சராசரியாக, கடுகு எண்ணெய் இப்போது லிட்டருக்கு ரூ.170-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது வழக்கத்தை விட சுமார் 25 சதவீதம் அதிகம் ஆகும்.
மே 28ஆம் தேதி நிலவரப்படி, பாமாயில் விலை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் உயர்ந்து லிட்டருக்கு ரூ.134 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.சோயா எண்ணெய் 18 சதவீதம் உயர்ந்து, இப்போது உள்நாட்டு சந்தையில் லிட்டருக்கு ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
இந்த சூழலில் இறக்குமதி வரியை 10% குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற ஹெச்.வி.எல். நிர்வாக இயக்குனர் கேஷப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் விலை குறைவால் பொதுமக்களின் சுமை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.