பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும். புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒரு பகுதி கட்டுப்பாடு உள்ளது. இந்த நாடுகளுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது சில வகைத் தனிநபர்களுக்கு மட்டும் தடை போன்ற வரையறைகள் விதிக்கப்படலாம்.
இந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நடவடிக்கை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சரியான பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் இல்லாத காரணங்களுக்காக என்று குறிக்கப்பட்டுள்ளன. மேலும். இந்த நாடுகளின் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நிர்வாக உத்தரவிலிருந்து உருவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, அமெரிக்காவிற்கு வருகை தர விரும்பும் இந்தியர்களுக்கு எந்தப் பயணக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு கவலைகளை அடிப்படையாகக் கொண்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்பும் அவரது நிர்வாக அதிகாரிகளும் கூறிவரும் நிலையில், கொள்கைகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை விகிதாசாரமாக குறிவைத்து பாரபட்சமான நோக்கத்தை பிரதிபலிக்கின்றன என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதாவது, 2016 ஆம் ஆண்டு தனது பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதை “முழுமையாக முடக்கப்படும் என்று டிரம்ப் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: இந்திய மாணவர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்!. வலுவான எல்லைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய கனடா!.