பொதுவாக, மாற்று திறனாளிகள் என்றாலே, அவர்களுக்கு அனைத்துமே சவாலானது தான். ஆனால், இங்கே ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு வாழ்க்கைத் துணையை தேடி தர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில், அரசு அதிகாரிகள் தலைமையில், வாரம்தோறும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், தங்களுடைய குறைகளை தீர்த்து வைக்குமாறு, முறையிட்டு, பல மனுக்களை எழுதி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.
அதன் பிறகு அதிகாரிகளால், இந்த மனுக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர், மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் அந்த மனு மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்வார்.
அந்த விதத்தில், ஒரு மாவட்டத்தின் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சஞ்சீப் மொஹபத்ரா, தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை தேடிப் பிடித்து, திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியிருக்கிறார்.
அந்த மனுவில், தன்னுடைய தாய், தந்தை இருவருக்கும் வயதாகி விட்ட நிலையில், இருவரும் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் என்றும், தன்னுடைய சகோதரரும் திருமணம் செய்து கொள்ளாமல், தனியாகவே வாழ்ந்து வருகிறார் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை அவசியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், இது குறித்து அந்த மனுவின் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த மனுவை வாங்கி படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர், அதிர்ச்சியில் உறைந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் எந்தவிதமான நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார்? என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.