தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிதாக களம் காணவுள்ள விஜய்யின் தவெகவும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் விஜய் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே, தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை விஜய் முழுமையாக முடித்து கொடுத்துள்ளார். இதனால் இனி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். கோவையில் நடந்த பூத் கமிட்டி மாநாடு போல், அடுத்ததாக மதுரை, தருமபுரி, நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விஜய் முதற்கட்டமாக மக்களை நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 42 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளை தவெக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
ஜூலை 2-வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி அல்லது மதுரையில் விஜய்யின் இந்தப் பயணம் தொடங்கப்படும் என்றும் இதற்காக பிரத்யேக பிரச்சார வாகனமும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், விஜய் என்ன பேச வேண்டும் என்பதற்கும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி, தவெக நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது என்று விஜய் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Read More : விவசாயிகளே.. உங்களுக்கு ரூ.2,000 வரப்போகுது..!! விண்ணப்பிக்காதவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!