உத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த தம்பதி, அலம்பாக் காவல்நிலையத்தில் தனது 3 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விசாரணையின் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சுமார் 3 மணியளவில் வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஒரு நபர் வருவது தெரியவந்தது. அந்த நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிக் கொண்டு சென்றுள்ளான். அந்த ஸ்கூட்டரின் நம்பரை வைத்து, அது தீபக் (26) என்பவர் என அடையாளம் காணப்பட்டது. இவன், தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து வந்துள்ளான்.
பின்னர், இவனை பிடிக்க சென்றபோது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், தீபக் பலத்த காயமடைந்தான். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.