ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும், லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் மாடு மற்றும் பன்றி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு கூறினார். மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி .ஃபுட் உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சிபிஐ, உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் போலவே போலோ பாபா டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்கள் விசாரணையில் சிக்கின. இந்நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஏ.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன், போலோ பாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின் ஜெயின், பூமில் ஜெயின், வைஷ்ணவி நிறுவனத்தின் சிஇஓ அபூர்வா ஆகியோர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில், “இவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய்யே கிடையாது. பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் போலியாக நெய் தயாரித்துள்ளனர். இதில் அறங்காவலர் குழு மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன. போலே பாபா நிறுவனத்துக்கு பாலை சேகரிக்கவோ, நெய் தயாரிக்கவோ போதிய கட்டமைப்பு இல்லை. அந்த நிறுவனம் தங்களிடம் பால் கொள்முதல் செய்ததே இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எங்களது ஆய்விலும் அது பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் கலப்படம் செய்தது தெரியவந்தது.
இந்த விவகாரம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக போலோ பாபா நிறுவனம் ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனங்கள் மூலம் உண்மையான நெய் போன்று விநியோகம் செய்துள்ளனர். இது பக்காவான சதித் திட்டம் ஆகும். இதற்கான வாட்ஸ் அப் உரையாடல்களும் உள்ளன. இவர்கள் அனைவரும் பண பலம் படைத்தவர்கள். இவர்கள் வெளியில் வரும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டனர். இதைக் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாதம் ரூ.34,000 வரை சம்பளம்..!!