ஏர் இந்தியா விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை குஜராத்தின் பிரபலமான மிட்-டே செய்தித்தாளில் வெளியான விளம்பரம் பேசு பொருளாக மாறி உள்ளது.
நேற்று மதியம் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 242 பேரில், ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மோதியதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை குஜராத்தின் பிரபலமான மிட்-டே செய்தித்தாளில் வெளியான விளம்பரம் பேசு பொருளாக மாறி உள்ளது. அதாவது கட்டிடத்தில் விமானம் நுழைந்து வருவது போல் அந்த விளம்பரத்தில் கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது.
மிட் – டே நாளிதழின் முதல் பக்கத்தில் கிட்ஜானியாவின் வரவிருக்கும் தந்தையர் தின வார இறுதி நிகழ்வை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய விளம்பரத்தைக் கொண்டிருந்தது. விளம்பரத்தில் ஒரு கார்ட்டூன் காட்சி இடம்பெற்றது, முக்கியமாக ஏர் இந்தியா விமானம் ஒரு கட்டிட முகப்பில் இருந்து வெளியே வருவது இடம்பெற்றிருந்தது. நேற்று அகமதாபாத் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த சோகத்தை எதிரொலிக்கும் ஒரு காட்சியாக அந்த விளம்பரம் இருக்கிறது.
இந்த விளம்பரம் வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு உண்மையிலேயே நேற்று மதியம் ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நெஞ்சை உறைய வைக்கும் தற்செயல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மிட் டே பத்திரிகை அகமதாபாத் விமான விபத்தை முன்கூட்டியே கணித்ததா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மையில், இந்தப் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் இந்தியா மற்றும் கிட்ஜானியா இடையேயான முறையான ஒத்துழைப்பைக் குறிக்கிறது. விமானப் படம் என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து கிட்ஜானியா மையங்களிலும் அதன் விமான அகாடமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான வடிவமைப்பு என்றும், இது ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்களுடன் கூட்டாக உருவாக்கப்பட்டது என்றும் கிட்ஜானியா நிறுவனம் தெளிவுப்படுத்தி உள்ளது.
துயர விபத்து குறித்து வேதனை தெரிவித்த கிட்ஜானியா இந்தியா ” உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளது..
“மிட்-டேயில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பொறுத்தவரை, விமானப் படம் உலகளவில் கிட்ஜானியா முழுவதும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக்கலை அம்சமாகும், மேலும் ஏர் இந்தியா உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கல்வி முயற்சியான எங்கள் விமான அகாடமியைக் குறிக்கிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
இந்த விளம்பரம் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு முன்பே, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கோடைகால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த துயரத்திற்கு நாங்கள் உணர்திறன் உடையவர்களாக இருக்கிறோம், மேலும் கூறப்பட்ட காட்சியின் எந்தவொரு விளம்பரத்தையும் இடைநிறுத்தியுள்ளோம்,” என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டா மற்றும் மும்பையில் உள்ள கிட்ஜானியாவின் இடங்களில் உள்ள ஏர் இந்தியா ஏவியேஷன் அகாடமி, நேரடி அனுபவங்கள் மூலம் குழந்தைகளுக்கு விமான உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சி குழந்தைகள் விமான செயல்பாடுகளை ஆராயவும், விமானக் கட்டுப்பாடுகளை உருவகப்படுத்தவும், விமான நிலைய செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இவை அனைத்தும் பாதுகாப்பான, மினியேச்சர் கற்றல் சூழலில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பெரும் பரபரப்பு.. ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கம்.. என்ன காரணம்?