ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலை உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பான FATF கண்டித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பிற பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்களின் பணம் மற்றும் நிதியுதவி இல்லாமல் நடக்காது என்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது. FATF வெளியிட்ட அறிக்கையில் “பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகம் முழுவதும் பல உயிர்களை கொல்கின்றன.. அச்சத்தைத் தூண்டுகின்றன. 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை FATF மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகிறது. இந்த தாக்குதலை கண்டிக்கிறது. இந்த தாக்குதலும், சமீபத்திய பிற தாக்குதல்களும், பணம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களிடையே நிதியை மாற்றுவதற்கான வழிமுறைகள் இல்லாமல் நடக்க முடியாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று FATF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் “நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து எங்கள் கவனத்தை அதிகரித்துள்ளோம். எங்கள் பரஸ்பர மதிப்பீடுகள் மூலம், நிவர்த்தி செய்யப்பட வேண்டிய இடைவெளிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். உலகளாவிய வலையமைப்பில் 200+ அதிகார வரம்புகளின் மதிப்பீடுகளுக்கு பங்களிக்கும் நிபுணர்களை ஆதரிப்பதற்காக பயங்கரவாத நிதி ஆபத்து குறித்த வழிகாட்டுதலை FATF உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், உலகளாவிய கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது..
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபடுவதை மறுத்தாலும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் துணைக் குழுவான TRF ஆகியவற்றை பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்திய அதிகாரிகள் தொடர்புபடுத்தியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானின் ஆதரவு, அந்நாடு வழங்கும் நிதியுதவியையும் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்..
பாகிஸ்தானை ‘கிரே பட்டியலில்’ சேர்க்க இந்தியா அழைப்பு
பாகிஸ்தானின் பெயரை FATF இன் கிரே பட்டியலில் (Grey List) சேர்க்க இந்திய அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய கண்காணிப்புக் குழுவின் கிரே பட்டியலில் தற்போது 24 நாடுகள் உள்ளன. அவை பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் பெருக்க நிதியுதவி ஆகியவற்றிற்காக கண்காணிக்கப்படுகின்றன.
FATF இன் கிரே பட்டியலில் பாகிஸ்தான் பல முறை சேர்க்கப்பட்டுள்ளது. முதல் முறையாக 2008 இல் அந்த நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டது, ஆனால் பின்னர் அது 2010 இல் நீக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் மீண்டும் 2012 இல் கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டு 2015 இல் நீக்கப்பட்டது. ஜூன் 2018 இல் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டு 2022 அக்டோபரில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : IRCTC கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது ? தட்கல் டிக்கெட்டை எப்படி விரைவாக புக் செய்வது ?