ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்ததால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து நாடு முழுவதும் மக்கள் கணக்கெடுப்புடன் சேர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்தது.
இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 1, 2027 தேதியை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டில், சமூக நீதிக்கான எங்களின் முழு முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண் துடைப்பு சாதிவாரி தலைக்கட்டு கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது. அனைத்துச் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும். இதற்கென அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்யேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும்.
உரிய தரவுகள் முழுமையாகவும், முறையாகவும் இருக்கும் வகையில், குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மக்களைவை தேர்தலுக்கான மறு சீரமைப்பை நோக்கமாக கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்து சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில், அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதியாகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census)
நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசு சாதிவாரி
கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநிலங்கள் சில, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு
ஆய்வை நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என மாநில அரசுகள்
அறிவித்துள்ளன.
இந்த புதிய சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வில் (Caste Survey), மக்களின்
சமூக, கல்வி, வாழ்க்கைநிலை உள்ளிட்டவை குறித்த தரவுகள் முழுமையாக
சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசு இதை தான் செய்ய வேண்டும்.
எனவே, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் எந்தெந்த நிலைகளி பின் தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள், தற்போதைய சமூக நிலை விவரங்களையும் அதில் சேகரிக்க வேண்டும். இந்த ஆய்வானது, அனைத்து சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தையும், சட்டப்படி செல்லத்தக்க உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதியாரின் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகிற்கு பின்னால் சமூக அநீதிக்கு துணை போக கூடாது.
அவ்வாறு ஒளிந்து கொண்டு மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை மேலும் வலுவடையும் என்பதை மறந்து விட வேண்டாம்.
அத்துடன் எங்கள் கொள்கை தலைவர் பெரியாரின் கொள்கை முழக்கமான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை, கபட நாடக திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்த தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..