கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை என்று கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் கமல்ஹாசன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அவர் நேரடியாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் விளைவாக, கர்நாடகாவில் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு கர்நாடகா விதித்த “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடையை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த எம். மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் இருந்தபோதிலும், கர்நாடக அரசு வாய்மொழி அறிவுறுத்தல்கள் மற்றும் காவல்துறை தலையீடு மூலம் தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டைத் தடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. கர்நாடக அரசு இதுகுறித்து முடிவு செய்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகத்தில் படத்தை திரையிடுவது தொடர்பாகவும், வெளியிட்டால் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கருத்தை மதிப்பதாக கர்நாடக அரசு கூறியது.
இந்த நிலையில் இன்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்தது.. தக் லைஃப் படத்தை பார்க்க வருவோருக்கும், திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை பாதுகாகக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த மனு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தக்லைஃப் படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டுவது சட்டத்தை மீறுவதாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நகைச்சுவை நடிகரின் பேச்சுக்கு கூட நாச வேலைகள் நடக்கின்றன.. நாம் எதை நோக்கி செல்கிறோம் எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நகைச்சுவை, நாடகம், கவிதைக்கு எதிராக கும்பல்கள் மிரட்டுவதை ஏற்க முடியாது. தக் லைஃப் படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். படம் திரையிட யாரேனும் தடையாக இருந்தால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரவும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை திரையிட முடியும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இது போன்ற கும்பல்கள் திரையரங்கை எரிப்போம் என்று அச்சுறுத்தல் விடுத்தால் எந்த தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முன்வருவார்கள் என்ற நீதிபதிகள் இதனை தடுப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்தனர். கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : டேட்டிங் கன்ஃபார்மா..? ஒரே காரில் ஒன்றாக சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி..