சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருகு நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்கள் கைசென்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ச் அணி உரிமத்தை ரத்து செய்ய கோர போவதாக கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பில், பங்கு ஒதுக்கீடு, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை தாக்கல்கள் தொடர்பான மோசடி நடைமுறைகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட ஏழு பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “2003ம் ஆண்டு நிறுவப்பட்ட அசல் கட்டமைப்பிற்கு நிறுவனத்தின் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும். கலாநிதி, காவேரி மாறன் இருவரின் தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்த கலாநிதி மற்ற நபர்களுடன் சேர்ந்து ஒரு ஏமாற்றும், தந்திரமான திட்டத்தைத் திட்டமிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாநிதி மாறன் 2003ஆம் ஆண்டு சன் டீவி நெட்வொர்க்கின் 60 சதவிகித பங்குகளை பெரும்பான்மை பங்குதாரர்களின் எந்த ஆலோசனையோ அல்லது ஒப்புதலோ இல்லாமல் தனக்கே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிறுவனம் நிதி ரீதியாக வலுவாக இருந்தது என்றும், பணம் திரட்ட வேண்டிய அவசியமில்லை, எனவே இந்தப் பங்குகளை வெளியிட எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI), நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) ஆகியவற்றிடம் தாக்கல் செய்யப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தவறாக வழிநடத்துவதாகவும், மோசடியான ஆவணங்களின் அடிப்படையில் அமைந்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறன் தற்போது 75 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் பணமோசடி உட்பட கடுமையான குற்றங்களாகக் கருதப்படுவதால் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகத்தின் (SFIO) விசாரணையை தயாநிதி மாறன் கோருவார் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருகு நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்கள் கைசென்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ச் அணி உரிமத்தை ரத்து செய்ய கோர போவதாக கூறியுள்ளார். இதற்கு கலாநிதி மாறன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும், இது தனிப்பட்ட விவகாரம் என்பதால் சன் டிவி நெட்வொர்க் இயங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் தனியார் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
Read more: முன்னாள் முப்படை வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்…! மத்திய அரசு அறிவிப்பு…!