இஸ்ரேலும் ஈரானும் ஒரு பெரும் மோதலின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மோதல் ஒரு நேரடி போராக வெடிக்காதிருந்தாலும், அதன் சிதறலான தாக்கங்கள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலக நாடுகள் கவனத்துடன் பார்க்கும் இந்த மோதலில், ஒரு முக்கியமான உண்மை வெளிச்சத்துக்குள் வந்துள்ளது. “இஸ்லாமிய உம்மா” என அழைக்கப்படும் ஆன்மீக ஒற்றுமை ஒன்று நடைமுறையில் இல்லை என்பது.
1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி, அந்த நாடை தனித்து நடக்கச் செய்தது. அயதோல்லா கொமெய்னியின் விலாயத் அல்-ஃபகிஹ் கொள்கை, மத ஆட்சியை முன்வைத்தபோது, சன்னி இஸ்லாமிய நாடுகள் அதனை அச்சுறுத்தலாகவே கண்டன. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை “பெரிய சத்தான்” என்றும் “சிறிய சாத்தான்” என்றும் குற்றம்சாட்ட, வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புப் பரப்புக்கு மேலும் நெருக்கமாகத் தங்களை இணைத்துக்கொண்டன.
இன்று இஸ்ரேல் ஈரானை தாக்கும் அளவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதற்குப் பக்கபலமாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இந்தச் சூழ்நிலையில், இஸ்லாமிய நாடுகள் ஒன்று கூடாமல், வெறும் கண்டன அறிக்கைகள் அளித்து விலகி நிற்பது தான் மிகப் பெரிய அரசியல் வெளிப்பாடு. துருக்கி, பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளும், ஒரு காலத்தில் ஈரானுடன் இணைந்திருந்த நாடுகளும், இப்போது அமெரிக்க அனுகூல நாடுகளாக மாறி விட்டன.
வளைகுடா நாடுகள் இன்னும் வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவளிக்க இயலாத நிலைமை உள்ளது. அதற்கு முக்கிய காரணம், இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, வணிக, பாதுகாப்பு ஒப்பந்தங்கள். இவை அனைத்தும் பில்லியன் கணக்கில் போகின்றன. இந்த உறவுகளை விட்டுவிட்டு ஈரான் பக்கம் செல்லும் தைரியம் அந்த நாடுகளுக்கு இல்லை. காரணம், ஈரான் வளர்ச்சியடையும் அணுசக்தி திட்டங்கள், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி போன்ற பினாமி அமைப்புகளுக்கு வழங்கும் ஆதரவு போன்ற செயல்கள் தான்.
அரபு நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் உள் வேறுபாடுகள், மதப்பிரிவுகள், வெளியுறவுக் கொள்கை எதிர்மறைகள் அனைத்தும் இஸ்லாமிய உலகத்தை ஒரு கூட்டுப்பணியில் ஒன்றிணையச் சாத்தியமற்றதாக மாற்றிவிட்டன. இஸ்லாமிய உம்மா என்ற கருத்து, இன்று ஒரு உணர்வுப் பேச்சாகவே விட்டுவிட்டது. இந்த நிலையில், இஸ்ரேல்–ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்தால், அதன் தாக்கங்கள் சீரழிவுகளாக மாறும். இஸ்லாமிய உலகம் ஒருமுறையாவது உள்பார்வை மேற்கொண்டு, உண்மையான ஒற்றுமையின் நோக்கில் நகர வேண்டியது இன்றியமையாத தேவை.