கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க, மிதமான அளவில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆரம்பக் கால பிரசவம், குறைந்த பிறப்புவெடை குழந்தை அல்லது கருச்சிதைவுக்கு காரணமாக மாற வாய்ப்பில்லை என மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.
இதை உறுதிப்படுத்தும் வகையில், உலகளாவிய சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் தகவலின் அடிப்படையில், ஒரு கர்ப்பிணி வாரத்தில் ஐந்து நாட்கள், தினம் இருமுறை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நடப்பது பாதுகாப்பானது என்றும், முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தினசரி 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மிதமான வேகத்தில் மட்டுமே நடப்பது முக்கியம் என்றும், ஒரு வாரத்திற்கு மொத்தம் 150 நிமிடங்கள் உடற்செயல்பாடு மேற்கொள்வது போதுமானது என குறிப்பிடப்படுகிறது. கர்ப்பத்தின் இரண்டாவது பருவத்தில், குழந்தையின் வளர்ச்சியால் முதுகில் அழுத்தம் ஏற்படும் என்பதால், நடைபயிற்சியின் போது உடல் நிலைமையை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை சமநிலையுடன் அசைத்தல், பாய்ச்சாத வகையில் நடைபயிற்சி மேற்கொள்வது, சரியான காலணிகளை அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அவசியமாக்கப்படுகிறது.
சிறப்பு ஆலோசனைகள்:
- உடல் சோர்வடையும்படி நடக்க வேண்டாம்
- பேசும்போது சிரமம் ஏற்பட்டால் வேகத்தை குறைக்கவும்
- வெறும் வயிற்றில் அல்லது பசியுடன் நடைபயிற்சி செய்ய வேண்டாம்
- நடைபயிற்சிக்கு முன் சிற்றுண்டியாக வாழைப்பழம், ஆப்பிள், வேர்க்கடலை போன்றவற்றைச் சாப்பிடலாம்
- வெளியே செல்லும்போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்கவும்
மேலும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் வகையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நடைபயிற்சிக்குச் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச்செல்லுவது நல்லது. முடிவாக, கர்ப்பிணிகள் எந்தவொரு உடற்பயிற்சியும் மேற்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம் என்றும், தங்களுக்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.