மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக களமிறங்கி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. இது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பங்குசந்தைகள் மற்றும் பத்திரங்களில் முதலீட்டை தவிர்த்து, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக ஏற்று வருவதால், தங்கத்தின் விலை எட்டப்போகும் உயரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளரான அக்சய் வெளியிட்டுள்ள தகவலில் ஸ்பாட் தங்கத்தின் விலை 3 ,314 டாலர்களுக்கு மேல் சென்றால் அது 3 ,770 ரூபாய் வரை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறார் .மேலும் 3450 டாலரில் இருந்து 3520 டாலர்கள் வரை ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை நீடிக்கும் என்றும் அவர் கூறுகிறார் .
தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயரும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். வெள்ளியின் விலை 40 டாலர்கள் வரை உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்து இருக்கிறது , வெள்ளியின் விலை 24 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் தாக்கம் என்ன? இந்தியாவில் தங்கம் ஒரு முக்கியமான பொருளாக இருப்பதால், சர்வதேச விலை உயர்வு நேரடியாக உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த வாரம் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை: ஒரு கிராம் ரூ.9,235 என்ற அளவில் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையிலும் இதே விலை தொடர்ந்தது. தங்கத்தின் விலை ஏறும்போது, அதனுடன் சேர்ந்து செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை கூடுவதால், சில்லறை வணிகத்தில் பொதுமக்கள் மீது அதிக சுமை ஏற்படுகிறது.
ஈரான் மோதல், பொருளாதார மந்தநிலை, பங்கு சந்தைகளில் நிலவும் மாற்றுத்தன்மை, வர்த்தக மோதல்கள் என இவை அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே, நுகர்வோர்கள், முதலீட்டாளர்கள் தங்களுடைய முடிவுகளை மிகுந்த கவனத்துடன் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
Read more: வாஸ்துபடி இந்த 5 இடங்களில் இருந்து சாப்பிடுவது நல்லதல்ல.. ஏன் தெரியுமா?