விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்ட விஜய் ஜனநாயகன் படம் எனது கடைசி படம் என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் விஜய் தனது முடிவினை மாற்றி உள்ளதாக ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய விஜய் இதுதான் தனது கடைசி படம் என்றும், இதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதனால் திரையுலக ரசிகர்கள் பலரும் கடும் சோகத்தில் ஆழ்ந்தனது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் எனக் கூறியது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில் பேசும்போது கூட, சினிமாவின் உச்சத்தில் இருந்து மக்களுக்காக வந்துள்ளேன். அந்த சம்பளத்தை வேண்டாம் என உதறிவிட்டு வந்துள்ளேன் என்று எல்லாம் கூறினார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளில் நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அயர்லாந்தில் நடைபெற்ற ‘கேரளா கார்னிவல்’ நிகழ்வில், விஜய்யின் திரையுலக ஓய்வு குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் விஜயின் கடைசி படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மமிதா பைஜூ, “ஒரு நாள் படப்பிடிப்பின் போது, சாதாரணமாக அவரிடம், ‘ஜன நாயகன் தான் உங்களுக்கு கடைசிப் படமா? எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிறாங்க’ என்று கேட்டேன். அதற்கு விஜய் சார் தயக்கமில்லாமல், ‘தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் அது தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று பதிலளித்தார்” என்று கூறியுள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே நான் மேற்கொண்டு நடிப்பது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பேன் என கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படப்பிடிப்பின் கடைசி நாட்களில் விஜய் உணர்ச்சிவசப்பட்டதாகவும் மமிதா குறிப்பிட்டார்.
Read more: இரவு நேரங்களில் குற்றவாளியை தேடி போலீஸ் வீட்டிற்கு செல்ல தடை..!! – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி