சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது..
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் தடுக்கும்.. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி எதிர்வினையாக கருதப்படுகிறது. இது மேற்கத்திய நாடுகள் உடனான உறவுகளை மேலும் சீர்குலைக்கும்.. ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது.
ஈரான் அணுசக்தி தளத் தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கை
ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்கள் நாட்டின் மையவிலக்குகளையோ அல்லது அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பையோ முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு இரகசிய உளவுத்துறை மதிப்பீடு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் இரண்டு அணுசக்தி நிலையங்களை பாரிய GBU-57 பதுங்கு குழி குண்டுகளைப் பயன்படுத்தி குறிவைத்தன, அதே நேரத்தில் ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் மூன்றாவது தளத்தில் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளை ஏவியது. தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழித்துவிட்டதாக அறிவித்தார். மேலும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அமெரிக்க இராணுவம் “ஈரானிய அணுசக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டது” என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) முதற்கட்ட மதிப்பீட்டின்படி, அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரான் அணுமின் நிலையத்தின் சில வசதிகளுக்கான நுழைவாயில்களை மூடிவிட்டாலும், நிலத்தடி கட்டமைப்புகளையே அழிக்கத் தவறிவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன..
ஊடக அறிக்கைகளை மறுத்த ட்ரம்ப்
இந்த செய்திகளை போலி செய்திகள் என்று முத்திரை குத்திய ட்ரம்ப், இலக்கு வைக்கப்பட்ட தளங்கள் “முற்றிலும் அழிக்கப்பட்டன” என்று தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும் “ போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சியில் இணைந்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்றூ கூறினார்.
Read More : 3-ம் உலகப்போர் அச்சம்.. புடின் அறிவித்த முக்கிய முடிவு… கலக்கத்தில் உலக நாடுகள்..