143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, குழந்தையின் தாய் மருத்துவமனை விட்டு வெளியேறுவதற்கு முன் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் 50% க்கும் அதிகமான பிறப்புகள் நடைபெறும் என்பதைக் கருத்தில் கொண்டு, இங்கு தாமதமின்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய ஆய்வின்படி, பிறப்புகளில் 10% துல்லியமாக பதிவாகவில்லை என கண்டறியப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சில, 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டிய சட்ட விதிகளை பின்பற்றவில்லை. இதனையடுத்து, RGI அலுவலகம் மார்ச் மாதமே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை எச்சரித்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969ன் கீழ் நடைபெறுகிறது. இதில்: குழந்தையின் பெயர், பிறந்த தேதி, இடம், பாலினம், பெற்றோரின் விவரங்கள் பதிவாகின்றன. இது, அடையாள சான்று, வயது சான்று, குடியுரிமை, மற்றும் சமூக சேவைகளை பெறுவதற்கான சட்டபூர்வ ஆவணமாகும். இந்த சான்றிதழ் இல்லையெனில், அரசுத் திட்டங்கள், வாரிசுத் தகுதி நிரூபிப்புகள் ஆகியவையும் சிக்கலாகும். பள்ளி சேர்க்கை, ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்றவை பெற இயலாது.
Read more: இரயில் கட்டண உயர்வு பரிசீலனையில் மட்டுமே உள்ளது..!! – ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம்